தமிழர் மரபில் ஆரியர் வந்த பின்பு ஆகமம், பூஜைகள், யாகம், பிரம்மன், பிராம்மணன் என்ற தமிழரல்லாத கலாச்சாரம் உள்ளெ பிராம்மணரால் புகுத்தப்பட்டது என்றும் அவை ஆரியர் தமிழரின் மீது ஆதிக்கம் செலுத்தவே உருவாக்கப்பட்டவை என்றும் சிலபல கற்பனைக்கு கதாசிரியர்கள் இப்போது நம்மிடம் பல இணைய தளங்களில் எழுத துவங்கியுள்ளனர். அதற்க்கு ஆதாரத்துடன் தமிழரிடம் இருந்தது பாரதம் முழுதும் இருந்த முறையே அன்றி வேறில்லை என்றும் ஆரியர் திராவிடர், தமிழ்க்குடிகள் போன்ற பிரிவினை தேவை இல்லை என்பதை விளக்கவுமே இந்த தொடர் சங்கப்பாடல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி தன் தரப்பை நிறுவவுள்ளது.
“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்! கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!
முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!
கந்தன் = இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் = இவன் “விஷ்ணு” அல்ல!
இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை) என்று கண்ணபிரான் ரவிசங்கர் என்னும் "ஒரு அறிஞர்" எழுதியுள்ளதைக் காண நேர்ந்தது. கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:( என்று எழுதியுள்ளார்.
மேலோட்டமாகப் பார்த்தல் அடடே விஷயம் தெரிந்தவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றும். ஆனால் இவர் சொல்வது போல சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ளபடி தமிழர்களுக்கு முருக வழிபாடும், மால் வழிபாடும் எப்படி செய்வது என்று விளக்கி சொன்னால் நலம்.. கடைச்சங்க காலத்தில் திடீரென உள்ளே பார்ப்பனீயம் உள்ளே நுழைந்தது என்பதற்கும் இடைச்சங்க காலத்தில் பார்ப்பனீயம் இல்லை என்பதற்கும் வலுவான தரவுகளை தரவும் முடியாது. இடைச் சங்க நூல்கள் எவை எவை என்றும் விளக்கினால் நலம். இந்தியாவில் எங்கேயுமே நடுகல் வைத்து வழிபடப்படவில்லை, தமிழகத்தில் மட்டும் தான் நடுகல் வழிபாடு இருந்தது என்றும் அறுதியிட்டுக் கூற முடியுமா?
சமஸ்க்ரிதம் மட்டுமே மூலத்தமிழை சிதைத்தது என்றால் இன்று நாம் பயன்படுத்தும் இந்த உரைநடை எழுத்துக்களே முற்பட்ட காலத்தில் இல்லையே, பிராமி தமிழ் எழுத்துக்கள் அல்லவா கல்வெட்டுகளில் கிடைக்கின்றன, அப்போது புதிதாக நுழைந்து நம் எழுத்திலக்கண அமைப்பை யார் திணித்தார்கள் என்று சொல்வீர்கள்? அதற்கும் பார்ப்பனர் வந்து புகுத்தினர் என்று கூறுவீர்களா? ஹிந்து மதம் என்பது இல்லை என்பதை ப்ராமணர்களுமே ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு பெயர் இல்லை, இது ஒரு பலவித தொன்ம வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள், பண்பாட்டுப் பிரிவுகள், நாகரீக வளர்ச்சியினால் ஒன்றாக தாமாய் இணைந்த பெரும் ஞான மரபு மற்றும் பண்பாட்டு தொடர்ச்சி, வாழ்வியல் முறை என்று தான் உச்ச நீதி மன்றம் முதற்கொண்டு ஒத்துக்கொண்டு விட்டது. நீங்கள் இந்தக் கட்டுரையில் நிறுவ விரும்புவது ஹிந்துக்களும் தமிழர்களும் ஒன்று இல்லை என்பதா? அவ்வாரே ஆகுக.
தமிழர்களும், தெலுங்கர்களும் கன்னடர்களும், ஓரியாக்களும், அஸ்ஸாமிக்களும், காஷ்மீரிகளும் ஒன்று இல்லை என்பதுவும் உண்மையே! இவர்கள் எல்லாருமாக சேர்ந்தாலும் ஹிந்துக்கள் என்று கூறப்படக்கூடாதா? சரி, இவர்கள் அனைவரும் தத்தமது இடம்,மொழி அடிப்படையில் அவர்களின் பெயர்களின் வழங்கப்படலாம், தவறில்லை, ஆனால் இவர்களின் வழிபாட்டு முறையில் உள்ள ஒற்றுமை என்னும் கொண்டையை மறைக்க தான் எந்த நவீன பிரிவினை எழுத்தாளர்களாலும் முடியவில்லை. தமிழனின் வழிபாட்டு முறை என்ன? சுடராட்டுதல், நீராலும் முழுக்காட்டுதல், படையல், கொடை, மலர் சொரிதல், போன்ற எளிய வழிபாட்டு முறைகள் தான். நடுகல் அமைத்து, அல்லது அல்லது சிறிய தூண்களில் சிலைகளை அமைத்து மேற்கூறிய வழிபாட்டு முறைகளை செய்தார்கள். இதையே தான் பாரதம் முழுக்க அனைத்து மொழி பேசும் ஆதி பாரத மக்கள் வழிபாட்டு முறையாக செய்து வந்துள்ளார்கள். எந்த மொழி தொன்மத்தையும் எடுத்துப்பாருங்கள் . இந்த மலராட்டு தான் அர்ச்சனை, சுடராட்டு தான் தீபாராதனை, படையல் தான் நிவேதனம், உயிர் கொடை தான் பலி, நீராட்டலும் முழுக்காட்டலுமே அபிஷேகம். இந்த வழிபாட்டு முறைகளே இந்திய பாரதப் பண்பாட்டின் வேர். என்ன தான் மொழியை வைத்து பிரிவினை கற்ப்பித்தாலும் திருமாலை விஷ்ணு இல்லை என்று கூறினாலும், திருமாலை இன்றைய தேதியில் எப்படி வழிபடுவது என்று சங்கப்பாடல்களில் தேடினால் அது பாற்கடலில் பள்ளி கொண்டவனையே சுட்டுகிறது.
இந்த முதல் இடை சங்க நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை என்பதையே ஒரு சாதகமான அம்சமாக வைத்துக்கொண்டு கடைச்சங்கத்துல பார்ப்பனீயம் உள்ளே புகுந்து தன் பண்பாட்டை நிறுவியது என்றொரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். முதல் இடை சங்க நூல்களே இல்லையெனும் பொழுது அவற்றில் உள்ளது பாரதப் பண்பாடு என்னும் வழக்கமே இல்லைனு எப்புடி சொல்றீங்க? முருகனும், தாவீதும் ஒன்றே என்று கூறியும் கூட இணையத்தில் கட்டுரைகள் வருகின்றன. ஆனால் துளியும் உண்மை இருக்க வேண்டும்மல்லவா?
பரிபாடலில் எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ
(பரி. 3:63-68)
எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.
(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை,மைந்து
= வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன்,
திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி).
பரிபாடல் "வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;" என்று திருமாலை கூறிவிட்டதே! வேதத்து மறை என்றால் வேதங்கள் கூறும் பொருளாக மறைந்திருப்பவன் என்று பொருள். உடனே இப்ப தமிழ் வேதம் எதுன்னு நாம ஒரு தனி அல்வா கிண்டியாகணுமே! ஐயோ போச்சே!
நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை வாகை
துறை: மூதின் முல்லை புறநானூற்றுப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டி நிவேதன முறை தமிழர்க்கு இல்லை என்று நிறுவ முயல்கிறார்கள். கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை!
ஆனால் ஒட்டு மொத்த நடுகல் வழிபாட்டையே சிவவாக்கியர் எதிர்க்கிறார். அதற்காக தமிழன் வழிபாட்டு முறைகளுள் நடுகல் முறை இல்லை என்றாகி விடுமா?
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)
அது போலத்தான் இந்த மாங்குடிக் கிழார் பாடலும். அது அவர் கருத்தாகக் கொள்ள வேண்டுமேயன்றி ஒட்டு மொத்த தமிழ் குடியின் வழிபாட்டு முறையை அதைக்கொண்டு நாம் அறிய முடியாது. அப்படிப்பார்த்தால் எதுவுமே மிஞ்சாது.
தமிழ் தெய்வங்களை ஏற்கும் சிலர் தமிழ் தெய்வங்களை தம் முன்னோர், தலைவன் என்பதை அழுத்தமாகச்சொல்லி கடவுள் தன்மையைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.ஆனால் மேற்கண்ட இப்பாடல் மூலம் கடவுள் தன்மைக்கு நம் முன்னோர் தந்த முக்கியத்துவம் புலப்படும்.
மேலும் வடவர் திருமாலை 'விஷ்ணு' என்பர் அதன் பொருள் எங்கும்_நிறைந்தவர் என்பதாகும்.
எங்கும் நிறைந்திருக்கும் திருமாலின் தன்மையைத் தமிழன் தெளிவாக உணர்த்தியுள்ளான்.
பரிபாடலில் சொல்வது என்னவெனில்
மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
- (பரி.5, 25-27)
இதில் மிக முக்கியமானது அசுரருக்கு வரம் தரும் சிவபெருமானே அவர்கள் அதை தவாறாகப் பயன்படுத்தும்போது அவர்களை அழித்த செய்தியாகும். முதலில் இந்த தேவாசுர யுத்தமென்பது ஆரிய தமிழர் யுத்தம் என்று புனைவதை நம்பக்கூடாது. இதன்மூலம் அசுரர் என்பது தமிழரைக் குறிப்பிடுவது என்ற விஷப் பிரச்சாரமும் முறியடிக்கப்படுகிறது.அப்படி இருந்தால் தமிழர்கள் வதைக்கப்பட்டதைப் பெருமையாக தமிழ்ப்புலவர்கள் பாடியிருப்பார்களா?
உங்களின் கட்டுரை வழிபாட்டு முறைகளும், நம்பிக்கை முறைகளும் நிறுவன மயமாக்கப்படலை எதிர்ப்பதை தடுப்பதே என்றால் எனக்கு அதில் எள்ளளவும் பிரச்சினை இல்லை. நீங்கள் திராவிடம் செய்யும் அதே விஷமத்தை அதாவது வெறும் பார்ப்பன வெறுப்பரசியலை மட்டுமே திணிக்கிறீர்கள். நிறுவனமயமாக்கலை எதிர்ப்பதென்றால் அறநிலையத் துறை என்ற பெயரில் கோவில் நிலங்களை EO போட்டு கொள்ளை அடிக்கும் கழகங்களை எதிர்த்து கட்டுரை எழுதலாம். மன்னர்களை வைத்து பார்ப்பனீயம் செழித்தது என்று அதே கிழிந்த தரவுகள் இல்லாத பல்லவியை புது ராகத்தில் எளிய முறையில் பாட முயன்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பாட்டில் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்கல், வடமொழி எப்படி இறைவனை வர்ணிக்கின்றனவோ அப்படியே தான் சங்க நூல்களும் சொல்கின்றன.
மேற்கண்ட படங்களை பாருங்கள். இங்கே எப்படி நடுகல்லோ அவ்வாறே வட இந்தியாவிலும் காணப்படுகிறது. யுத்தம் நிகழ்ந்த இடங்களில் அல்லது வீரன் மறைந்த இடத்தில் அவன் அல்லது அவர்களின் நினைவாக குஜராத், பாகிஸ்தான், சிந்து நிலம், மஹாராட்டிரம் ஆகிய இடங்களில் இந்த நடுகல் வழிபாடு சின்னங்கள் பெரிதும் காணக்கிடைக்கின்றன.. எனவே தமிழன் வேறு, இந்தியன் வேறு, அல்லது அன்றைய இந்தியனின் பெயரான பாரதீயன் வேறு என்று சும்மா பழைய ஜல்லியை அடிக்க வேண்டாம்.